Friday, 6 December 2019

கொல்லிவாய் பிசாசு:

கொல்லிவாய் பிசாசு:

நான் சிறுவனாக இருக்கும்போது எந்த குழந்தையாவது சாப்பிட அடம்பிடித்தாலோ அல்லது வேறு எதாவது சேட்டைகள் செய்தாலோ நிலாவைக் காட்டி சோறு ஊட்டறது , பூச்சாண்டி காட்டி ஊட்டறது போய் கொல்லிவாய் பிசாசு வரப்போகுது என்று பயமுற்படுத்துவார்கள்.

அப்போது எனக்கு கொல்லிவாய் பிசாசு எப்படி இருக்கும் என்று தோன்றியது.
அதைவிட கொஞ்சம் விவரம் தெரிந்தவுடன் யாராவது திடீர்னு இறந்து விட்டால் நேரங்கெட்ட நேரத்தில் பல இடங்களுக்கு போய் வந்ததால் கொல்லிவாய் பிசாசு அடித்து கொன்று விட்டதாக கிராமத்தில் சொல்வார்கள்.

அப்போதும் அந்த கொல்லிவாய் பிசாசு எப்படி இருக்கும் எங்கே இருக்கும் என்று பார்க்கும் ஆவல் தோன்றியது.

அதன்பிறகு கோடைகாலங்களில் கிராமத்தை சுற்றி கோயில் திருவிழாவை முன்னிட்டு நடக்கும் இரவு வேடிக்கைகள் (நாடகம் , கரகாட்டம் , ஒயிலாட்டம் , திரைப்படம் ) பார்க்க இரவு நடந்து போவோம்.

அப்போது சில திசைகளில் இருந்து மரங்களுக்கு இடையே தீப்பற்றி கொழுந்து விட்டு எரியும். அதைத்தான் கொல்லிவாய் பிசாசு நம்மை பயமுறுத்த வந்துவிட்டது. அந்த பக்கம் பார்க்கக்கூடாது என்பார்கள். ஒருவர்க்கு ஒருவர் மிக அருகில் சென்று பயத்துடன் கடந்து போவோம். பெரும்பாலும் இந்த மாதிரி நிகழ்வுகள் வரிசையாக நிற்கும் பனைமரங்களிடயே தான் அதிகம் ஏற்படும்.

பின்னாட்களில் வெப்ப காலத்தில் கடும் உராய்வால் மரம் தீப்பிடித்து கொண்டதைத்தான் கொல்லிவாய் பிசாசு என்று சொல்லியிருக்கிறார்கள் என்று உணர்ந்தாலும் , இந்த பேர் எப்படி வந்தது , மனிதர்கள் இறப்பிற்கும் இதற்கும் என்ன தொடர்பு என்று யோசித்துகொண்டிருந்தேன்.

பல வருடங்கள் கழித்து கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் படித்து முடித்து அதன் பிறகு 10 வருடம் கழித்து பாலகுமாரனின் உடையார் நாவல் படித்தபோதுதான் கொல்லிவாய் பிசாசு எப்படி எங்கிருந்து வந்தது என்று ஓரளவுக்கு புரிந்தது.

அது எப்படி என்று பகிர்ந்து கொள்கிறேன்.

சோழர் குல ஆட்சி தமிழகத்தில் உச்சம் அடைய ஆரம்பித்த காலத்தில் சுந்தர சோழர் என்ற மன்னர் ஆட்சி புரியும்போது தங்களுடைய நாட்டின் எல்லை விரிவுபடுத்தியபோது ஏற்பட்ட போரில் சுந்தர சோழரின் மூத்த மகன் ஆதித்ய கரிகாலன், பாண்டிய மன்னன் வீரபாண்டியன் தலையை கொய்து கொன்று விடுகிறான். அப்போது பாண்டிய அரச ஆபத்துஉதவிகள்  அதற்கு பதிலடி கொடுக்க சரியான படை வலிமை இல்லாத காரணத்தால் வேறு வழியில் ஆதித்ய கரிகாலனை பழிவாங்க நினைத்திருந்தார்கள்.

அதன்படி ரவிதாசன் என்பவன் தலைமையில் பில்லி , சூனியம் , மந்திரம் போன்ற செயல்களில் நம்பிக்கை கொண்டு , அதற்க்கான வேள்விகள் செய்து சோழ நாட்டில் கலவரமும் அமைதியின்மையும் மன்னரும் வாரிசுகளும் உடல்நலம் குன்றி சாக வேண்டும் என்று முயற்சி எடுத்திருக்கிறார்கள்.

ஆனால் இந்த நம்பிக்கை சோழ நாட்டிலோ பாண்டிய நாட்டிலோ இருந்ததில்லை. மலைப்பகுதியான சேர நாட்டில் உள்ள முன்குடுமிக்காரர்கள் மனித சக்தியை தவிர இந்த உலகத்தில் சில சூட்சம சக்திகள் இருப்பதாகவும் அவற்றை கட்டுப்படுத்தி பயன்படுத்த தெரிந்தால் தாங்கள் நினைத்ததெல்லாம் செய்துகொள்ளலாம் என்று நம்பி அவ்வாறே பலவித பயிற்சிகள் , மந்திரங்கள் செய்து மற்றவர்களை துன்புறுத்தவும் மற்றும் காரியங்கள் சாதித்து கொள்ளவும் செய்திருக்கிறார்கள். தொடர்ந்து அந்த பழக்கத்தை தங்கள் வாரிசுகளுக்கும் கற்றுக்கொடுத்து வந்திருக்கிறார்கள். அதன் தொடர்ச்சிதான் இன்றைய பிரபல கேரள மாந்த்ரீகர்கள்.

அந்த சமயத்தில் சேர நாட்டு மந்திரவாதிகளின் உதவியுடன் ஆள் நடமாட்டமில்லாத மலைப்பகுதிகளில் நடு இரவுகளில் ரவிதாசன் தலைமையில் மண்டையோடு முதலியவற்றைக் கொண்டு மந்திரங்கள் செய்து பேய்களை சோழ நாட்டில் அவிழ்த்து விட்டதாக நம்பப்படுகிறது.


ஆதித்ய கரிகாலன் எப்படி கொல்லப்பட்டான் என்பது இன்று வரை மர்மமாகவே உள்ளது. ஆனால் அவனை கொன்றது இந்த ரவிதாசன் தலைமையிலான குழுதான் என்று பின்னர் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டு ஆண்கள், பெண்கள் , சிறுவர்கள் , உறவினர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் நாடுகடத்தப்பட்டார்கள். கொலைகாரர்கள் பிராமணர்கள் என்பதால் குற்றவாளிகளை கொல்லவில்லையாம். ஆதித்ய கரிகாலன் கொல்லப்பட்டு வீரநாராயண (வீராணம்) ஏரியில் மிதந்தாக சொல்லப்படுகிறது.

சரி இதற்கும் கொல்லிவாய் பிசாசுக்கும் என்ன சம்மந்தம் என்றால், ரவிதாசன் குழு அடர்ந்த காடுகளில் இருந்து நள்ளிரவில் மந்திரம் செய்து சூட்சம சக்திகளை நாட்டுக்குள் அனுப்பி பிரச்சினைகளை ஏற்படுத்தினார்கள் என்று நம்படுகிறதல்லவா? அவையெல்லாம் அவர்கள் கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள காடுகளில் இருந்து ஏவப்பட்டதாக நம்பப்பட்டது. அதனால் ஊருக்குள் யாருக்காவது பேய் பிடித்திருந்தது என்றால் கொல்லிமலை பிசாசு , கொள்ளிவாய் பிசாசாக பயங்கரமாக உருவாக்கப்படுத்தப்பட்டு சோழ நாட்டில் மட்டுமல்லாமல் சோழர்கள்  அதன் பிறகு மொத்த தமிழ்நாட்டையும் ஆண்டதால் எங்கும் பரவியிருக்கிறது . அது இன்றும் தொடர்கிறது.

இதெல்லாம் ஒரு matter . இதையெல்லாம் ஒருவன் மெனக்கெட்டு எழுதியிருக்கிறான் என்று நினைக்கிறீர்களா ?

வரலாறு முக்கியம் அமைச்சரே !!!! 


















No comments:

Post a Comment