"எந்த நாட்டு இளைஞனுக்கு எக்கைப் போன்ற இதயம் இருக்கிறதோ, அந்த இளைஞனுக்கு வாள் தேவையில்லை" கவிஞர் Iqpal !
எக்கைப் போன்ற இளைஞர் கூட்டத்தின் கையில் வாட்கள் இருக்குமானால்....?
ரத்தத்தைத் தாருங்கள் ; நான் உங்களுக்கு விடுதலையை வாங்கித்தருகிறேன்"
என்றார் நேதாஜி .
ரத்தத்தைத் தருவதற்கு ஒரு கூட்டமே தயாராக இருந்தால்...?
எக்கு
இதயம் கொண்ட இளைஞர் கூட்டம் ரத்தத்தைத் தந்ததால் பெறப்பட்டதே இன்று நாம்
பெற்ற சுதந்திரம். பலரின் உயிரற்ற சடலங்களே, விடுதலை என்ற வார்த்தையை
உயிர்ப்பித்தன. அவர்கள் தங்கள் எலும்பை விடுதலை வேள்விக்கு விறகு
ஆக்கியதால்தான் நாம் வெளிச்சம் பெற்றோம். இந்த வரலாற்றைக்கூட முழுமையாக
உணர்ந்தோம் இல்லை.
ஏதோ
காந்தி தாத்தாவும் நேரு மாமாவும் கடைக்குப் போய் மிட்டாய் வாங்கி வந்தது
மாதிரி இந்தியாவுக்கு விடுதலையை பாக்கெட் போட்டுக் கொடுத்தார்கள் என்ற
தவறான வரலாறு, தவறான பாதைக்கே இட்டுச் செல்லும்.
முதல்
இந்திய சுதந்திர போர் எது என்று கேட்டால், 1857-ம் ஆண்டு வட இந்தியாவில்
நடந்த சிப்பாய் கலகத்தை சொல்வார்கள், தமிழ்நாட்டு பிள்ளைகள். அப்படித்தான்
அவர்களுக்கு கற்பிக்கப்பட்டு உள்ளது.
பிரிட்டிஷ்
ஏகாதிபத்தியத்துக்கு எதிராக முதல் விடுதலை போரை முதலில் தொடங்கியவர்கள்
தமிழர்கள். சிப்பாய் கலகத்துக்கு 100 ஆண்டுகளுக்கு முன்பே பிரிட்டிஷாரை
கூறுபோட்டவர்கள் தென்னவர்கள்.
'செந்நெல் மணியரிசி சீரகச் சம்பாவை
உன்னத் தருவான் உயிர் தருவான் ஆனாலும்
ஒரு நெல் மணிகூட வெள்ளையருக்குக் காணிக்கை
வரிக்கட்டாக் காரணத்தால் நெற்கட்டான் செவ்வலென்பார்'
என்று
கவிஞர் ம.முத்தரசால் பாடப்பட்டவன் நெற்கட்டான்செவல் பூலித்தேவன். "முடிந்த
அளவு கப்பம் கட்டு " என்று இறங்கிவந்த ஆங்கில கவர்னர் கெரானிடம், 'ஒரே ஒரு
நெல் மணியைக் கூடத் தரமாட்டேன் ' என்று சொல்லி விரட்டியவன் பூலித்தேவன்.
ஓராண்டு ஈராண்டு அல்ல 17 ஆண்டுகள் இடைவிடாமல் போராடினான். 'பூலித்தேவனின்
தலையை வெட்டிக் கொண்டுவந்து மேலிடத்திற்கு அனுப்பி வைக்கிறேன் ' என்று
கடிதம் எழுதிய யூசுப் கானின் கையில் சிக்காமல் தப்பியவன் பூலித்தேவன் .
பாளையங்கோட்டை சிறையில் தப்பினானா, சங்கரன்கோயில் கோமதியம்மன் கோயிலில்
மறைந்தானா என்ற மர்மம் விலகாத மாவீரன் பூலித்தேவன்.
'பாளையக்காரர்கள் கோட்டைக் கட்டக்கூடாது ' என்ற கட்டளையை மீறிக் கோட்டை கட்டியவன் கட்டபொம்மன் .மேஜர் பானர்மேன் விசாரணை என்ற நாடகத்தை நடத்தியபோது, 'எதுவும் சொல்வதற்கு இல்லை ' என்று அலட்சியமாக எல்லாக் கேள்விகளையும் நிராகரித்தவன் கட்டபொம்மன். துரோகத்தால் கைதாகி தூக்கிலிடும் மரத்துக்கு அழைத்துச் செல்லப்படும் முன்பு அவன் நடந்து கொண்ட விதத்தை பார்த்து பறங்கியர்களே மிரண்டு விட்டார்கள்.
விசாரணை
அதிகாரியான பானர்மேன் , பிரிட்டிஷ் அரசுக்கு எழுதி அனுப்பிய கடிதத்தில்'
'விசாரணை நடைபெற்ற நேரத்தில் கூடியிருந்தவர்கள் முன்பாகக் கட்டபொம்முவின்
போக்கும் நடத்தையும் அஞ்சா நெஞ்சத்துடன் ஏளனத்துடன் இருந்ததை நான் இங்கு
குறிப்பிடாமல் இருக்க முடியாது. தூக்கிலிடும் இடத்துக்கு கட்டபொம்மு
உறுதியுடன் வீரத்துடன் நடந்து செல்லும்போது இருபுறமும் வரிசையாக நின்ற
பாளையக்காரர்களை இகழ்ச்சியும் வெறுப்பும் தோன்ற உற்றுப் பார்த்தபடியே
சென்றார் ' என்று எழுதி அனுப்பினார். சாவு நிச்சயம் என்று தெரிந்த பிறகும்
வீரம் விலகாதவன் வீரபாண்டிய கட்டபொம்மன்.
பாஞ்சாலங்குறிச்சியில் இருந்த வாள் , ஈட்டி , கம்பு , வளைதடி , வில் , குதிரை ... ஆகிய அனைத்துப் படைகளுக்கும் தளபதியாக இருந்த மாவீரன் கெவிணகிரி சுந்தரலிங்கம். ராமநாதபுரம் அரண்மனைக்கு கட்டபொம்மனை விசாரணைக்கு ஜான்சன் வரச்சொன்னபோது, கட்டபொம்மனுக்கு முன்னமே அங்கே போய் ராமநாதபுரம் அரண்மனைக்குள் நுழைந்த வீரக்காற்று சுந்தரலிங்கம். கட்டபொம்மனை லெப்டினென்ட் கிளார்க் தாக்க முயற்சிக்க, மாறுவேடம் கலைத்து தாக்குதலைத் தொடுத்தவன் சுந்தரலிங்கம். ஆட்டுக் கூட்டத்துடன் அத்தை மகள் வடிவுடன் போய் ஆங்கிலேயரின் வெடிமருந்து கிடங்கில் குதித்து தற்கொலைப் படையாக மாறிய மாவீரன் சுந்தரலிங்கம்.
'சிவன் மலைக்கும் சென்னி மலைக்கும் இடையில் உள்ள சின்னமலை' என்று அழைக்கப்பட்ட தீரன் சின்னமலைதான் திப்பு சுல்தானுக்கு படைகளை அனுப்பியவன். காவிரிக் கரையிலும் ஓடா நிலையிலும் அரச்சலூரிலும் பிரிட்டிஷ் படைகளை விரட்டியவன். 'பல இடங்களில் தன் பெரும்படையால் வெற்றிபெற்ற மேக்ஸ்வெல் , சிறிய படையிடம் தோற்றார் ' என்று பிரிட்டிஷார் தலைகுனிந்து எழுதக் காரணமானவன். சமையல்காரனால் காட்டிக்கொடுக்கப்பட்டு சங்ககிரியில் வைத்து தூக்கிலிடப்பட்டான் தீரன் சின்னமலை.
'பேரரசுகளுக்குப்
பணியாளரும் இழிபிறப்பான பரங்கியருக்குப் பரம எதிரியுமான மருதுபாண்டியர் '
என்று கையெழுத்துப் போட்டு பகிரங்கமாக போருக்கு அழைத்தவர்கள் மருது
சகோதரர்கள். 'நீங்கள் பரங்கிகளை
எங்கு கண்டாலும் அவர்களை அழித்து ஒழியுங்கள் . மாறாக அதே இழிபிறப்புகளிடம்
பணியாற்றினால் உங்கள் சாவுக்குப் பின்னர் மறுமை இன்பம் கிடைக்காது ' என்ற
வார்த்தைகளை எழுதவே துணிச்சல் வேண்டும். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை தனியாக
நின்று எதிர்ப்பதைவிட பிரெஞ்சு ஆதரவையும் திப்பு சுல்தானின் உதவியையும்
மராத்தி துந்தியாவாக்கின் ஆதரவையும் பாளையக்காரர்கள் கூட்டணியையும்
ஒருங்கிணைத்து ஐக்கியம் கட்ட முயற்சித்தவர்கள் மருது சகோதரர்கள். அதனை
முளையிலேயே கிள்ளியெறிந்த பிரிட்டிஷார் வெள்ளை மருதுவையும் சின்ன
மருதுவையும் திருப்பத்தூர் கோட்டையில் தூக்கில் போட்டு அவர்களது உறவினர்கள்
பலரையும் அந்தமானுக்கு கப்பலில் கடத்தியதும் வரலாறு.
நெற்கட்டான்செவல்
பூலித்தேவன் , பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன், மாவீரன் சுந்தரலிங்கம் ,
தீரன் சின்னமலை , மருது சாகோதரர்கள் போன்ற விடுதலைக்கு போராடியவர்கள்
நமக்கென்ன என்று இருந்திருந்தால் விடுதலைத் தீ மூட்டப்பட்டிருக்காது.
யாரோ
போராடுவார்கள் , நமக்கென்ன என்று இவர்கள் இருந்திருந்தால் 200 ஆண்டுகள்
கழித்து அவர்களைப் பற்றி பேசிக்கொண்டிருக்க மாட்டோம். இவர்கள் எல்லாம்
விவரம் இல்லாமல் (!) ஆங்கிலேயருக்கு எதிராக போராடி துன்பபட்டுக்
கொண்டிருந்தபோது சுகவாசிகளாக வாழ்ந்த பல மன்னர்களின் பெயர்கள் இன்று
அவர்களது வாரிசுகளின் நினைவுகளிலே இல்லை.
யாரோ
சிலர் போராடுவார்கள், நாம் காலை ஆட்டிக்கொண்டு அனுபவிக்கலாம் என்ற காலம்
மலையேறி விட்டது. அன்று ஓர் எதிரி . இன்று கண்ணுக்குத் தெரிந்தும் ,
தெரியாமலும் ஓராயிரம் எதிரிகள் ! அவரவர் மூச்சுக்காற்றை அவரவரே விடவேண்டும்
என்பது எவ்வளவு இயற்கையோ , அழுதாலும் அவளவள்தான் பிள்ளை பெற வேண்டும்
என்பது எவ்வளவு இயற்கையோ அதைப்போல் நம்மளுடைய உரிமைகளுக்காக,
கோரிக்கைகளுக்காக நாமே ஒவ்வொருவரும் போராட வேண்டும்.
பேருந்து
பழுதாகி நின்றுவிட்டால் 10 பேர் இறங்கித் தள்ளுகிறார்கள். பல உள்ளேயே
உட்கார்ந்துகொண்டு 'சரியாகத்தான் தள்ளுகிறார்களா ?' என்று பார்க்கிறார்கள் .
தெருவைப் பார்க்க கவுன்சிலர் வரும்போது கதவை மூடிவிட்டு ஜன்னல் வழியாகப்
பார்க்கிறோம் . பொதுக்குற்றத்தை எதிர்த்து பேச தயங்குகிறோம். கைகட்டி
வேடிக்கை பார்ப்பவன் கையில் பூக்கள் விழுவதில்லை. மூடிக்கொள்பவன் உடலை
தென்றல் தொடுவதில்லை. துன்பப்படாதவனுக்கு இன்பம் இனிப்பதே இல்லை.!